மங்களம் பொங்கும் பொங்கல் திருநாள்

மங்களம் பொங்கும் பொங்கல் திருநாள்

புதுவருடம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு புதுவருடமும் மங்களகரமாகத் தொடங்குகின்றது! பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏந்தி வருகின்றது. சில எதிர்பார்ப்புக்களோ எளிதில் சுபமாக நிறைவேறுகின்றன. சில எதிர்ப்பார்ப்புக்களோ- பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. “அடுத்த வருடம் பார்க்கலாமே” என்று அங்கலாய்ப்புடன் முடிவடைகின்றது.

எது எப்படி இருந்தபோதும்...

வருடத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு மங்களமான நல்வரவு கூறி எம்மையெல்லாம் வாழ்த்தி வரவேற்கின்றது ஒரு பெருநாள். அதுதான்...

தைப் பொங்கல் என்னும் திருநாள்! இது உழைப்பவர்களின் திருநாளாக வந்து உழவர்களையும் வாழ்த்துகின்றது.
எமக்காகவே உழைத்த ஆடு மாடுகளையும் கெளரவிக்கும் ஒரு பெருநாளாக நன்றிக்கு உரித்தான ஒரு நாளாகவும் மிளிர்கின்றது.

அத்துடன்-

இந்த உலகத்தையே மேல் நின்று பல்லாண்டுகளாகக் காத்து, மழை, வெய்யில் யாவற்றையும் தந்து உலகத்திலே எல்லா சீவராசிகளும் சிறப்பாக வாழும்படி செய்த, நாம் கண்ணால் காணும் ஒரு தெய்வமான சூரியனுக்கும் பொங்கலிட்டு அமுது படைக்கும் அபூர்வத் திருநாளாக இன்றுவரை இருந்து வருகின்ற தைப் பொங்கல் திருநாள்!
பொதுவாகவே தைப் பொங்கல் விவசாய விளை நிலங்களில் வாழும் பெருமக்களின் திருநாளாகவே இனங்காணப்பட்டு வருகின்றது. எப்போது உழவரின் வாழ்விலே வசந்தம் பொங்குகின்றதோ அப்போது தான் தைப்பொங்கலும் கொண்டாடப்படுகின்றது. முக்கியமாக,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பெரியோர் கூறுகின்றனர். அதாவது,
வருடம் முழுவதுமே பாடுபட்ட விவசாயி தை மாதத்திலேயே தமது உழைப்பின் பயனை அனுபவிக்கின்றான். அதாவது, நெல் விளைந்து அறுவடைக்குத் தயாராகின்றது. காய்கனிகள் முற்றிப் பழுக்கத் தயாராகின்றன. கரும்பும், இளநீரும், கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் இம்மாதத்திலேயே விளைச்சலைத் தருகின்றன. ஆகவே-
விவசாயின் இல்லத்திலே பொருளாதாரம் தன்னிறைவு பெறுகின்றது. அகத்திலே உவகையும் மகிழ்ச்சியும் பொங்கித் தாண்டவமாடுகின்றது. ஆகவே-
உழவனானவன் தன் உழைப்பின் பயனை எண்ணிப் பேருவகை கொள்கின்றான். தனக்காக சேர்ந்தே பாடுபட்ட அனைவரையுமே நினைக்கின்றான். அவர்களுக்கு தன் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்து நல்லதோர் பெருநாளாகக் கொண்டாட விழைகின்றான். இதுவே தொன்றுதொட்டு இன்றுவரையும் நாம் கொண்டாடும். தைப்பொங்கல் திருநாளாகும்!
நன்றி தெரிவிக்கும்போது முதலில் யாருக்கு நன்றி தெரிவிப்பது?
உலகிலேயே முதன் முதல் நாகரிகம் ஏற்பட்டதே நதி தீரங்களில்தான். சிந்து நதித் தீரத்திலேயே நாடோடியாகத் திரிந்த ஆதி மனிதன் நிரந்தரமாகத் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கினான். சிந்து சமவெளியில் தோன்றிய உலகின் முதல் மூத்த நாகரீகத்துக்குச் சொந்தக் காரர்களே நம் இந்துக்கள் தான். இவர்களே நமக்கு மேலாக இறைவன் ஒருவன் இருப்பதை அறிந்து வழிபட்டனர்.
ஆகவே, முதன் முதலிலே கிடைக்கும் விளை பொருள் எதையுமே இறைவனுக்கே படைத்து மகிழ்ந்தனர். முதலில் விளைந்த நெல், சோளம், கரும்பு, காய் கனி யாவற்றையும் இறைவனுக்கே படைத்தனர். முக்கியமாக எமது தொழிலுக்கு மழையும் வெய்யிலும் கொடுத்து உதவிய சூரிய பகவானுக்கே இவற்றைப் படைத்து பொங்கலிட்டுப் பூஜைகள் புரிந்தனர். அன்று தொட்டே தைப்பொங்கல் (சூரிய பொங்கல்) தொடங்கியது.
தனி மனிதனாக பாடுபட்ட மனிதன் தன்னுடன் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் சேர்த்துக்கொண்டான். அவை மனிதனுடன் சேர்ந்தே பாடுபட்டன. அத்துடன் தம் பாலையும் தந்து உதவின.
ஆகவே மனிதன் நன்றியறிதலைக் காட்டுவதற்காக சூரிய பொங்கலின் மறுநாளே மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினான். அன்று... விலங்குகளை நீராட்டி மலர்மாலை அணிவித்து சந்தனம் சாத்தி அலங்கரித்து தெய்வீக அந்தஸ்தையும் அவைக்கே கொடுத்தான்.
ஆகவே மானிடன் சூரிய பகவானுக்கும் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் நன்றி தெரிவித்தே தைப் பொங்கலைக் கொண்டாடி வருகின்றானர். உழவுத் தொழிலையும் உழவனையும் வாழ்த்தவே தொன்றுதொட்டு எல்லோருமே பக்தி சிரத்தையுடன் தைப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
அன்பர்களே! இன்று தைப் பொங்கலும் கூட வெறும் களியாட்ட விழாவாகவே சில இடங்களிலே பார்க்கப்படுகின்றது. இன்றைய கூட்டத்திலே வெள்ளப் பெருக்காலும் வேறு அனர்த்தங்களாலும் இன்று உலகிலே பல இடங்களிலே விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகமே பஞ்சத்தாலும் பட்டினியாலும் வாடும்.
ஆகவே நாம் நம்மை மட்டுமல்ல இந்த உலகத்தையே காக்கும்படி எல்லாம்வல்ல இறைவனிடமும் சூரிய பகவானிடமும் வேண்டுவோம். இதுவே நாம் எல்லோருக்கும் கூறும் இனிய பொங்கல் வாழ்த்தாகட்டும்.